செய்திகள்
கீரைத்துறையில் வாளி தண்ணீருக்குள் தவறி விழுந்த குழந்தை பலி
கீரைத்துறையில் வாளி தண்ணீரில் தவறி விழுந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தது.
மதுரை:
மதுரை கீரைத்துறை திரவியலிங்கேசுவரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஈசுவரன். இவருடைய மகன் அகிலன் (வயது3½).
இவனுக்கு வலிப்பு நோய் இருந்ததால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். நேற்று அகிலன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அவனது தாய் வீட்டு முன்பு துணி துவைத்துக்கொண்டு இருந்தார். அவர் அங்கிருந்து வெளியே சென்ற நேரத்தில் அகிலன் அங்கு வந்தான். அவன் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த வாளி தண்ணீருக்குள் தவறி விழுந்தான். இதில் மூச்சுத்திணறிய அகிலன் பரிதாபமாக இறந்தான்.
இதுகுறித்து கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.