செய்திகள்

தேனியில் அ.தி.மு.க., தினகரன் அணி பேனர்கள் கிழிப்பு

Published On 2018-02-23 03:39 GMT   |   Update On 2018-02-23 03:39 GMT
தேனியில் அ.தி.மு.க. மற்றும் தினகரன் அணி சார்பில் வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:

தேனி மாவட்டத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு போட்டியாக தினகரன் அணி சார்பில் தங்கதமிழ்செல்வன் ஏற்பாட்டில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட நிர்வாகிகள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதற்காக இரு அணிகள் சார்பிலும் தேனி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

தேனி கான்வென்ட் ரோடு பகுதியில் இன்று காலை தினகரன் அணியினர் வைத்திருந்த 3 பேனர்களும் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டு இருந்த 2 பேனர்களும் கிழிக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்ததும் கட்சி நிர்வாகிகள் ஆவேசமடைந்தனர்.

இரு தரப்பினரும் தங்கள் பேனரை எதிர் அணியினர்தான் கிழித்திருக்க வேண்டும் என பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கிழிக்கப்பட்ட பேனர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்க வருகிறார். அதனால் தினகரன் அணியினர் தாங்கள் வைத்திருந்த பேனரை கிழித்து விட்டதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

மேலும் தினகரன் அணியினரும் அ.தி.மு.க.வினர் மீது குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் நிறுத்தப்பட்டனர்.

Tags:    

Similar News