தாராபுரம் அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதலில் 2 பெண்கள் பலி
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு தனியார் பஸ் இன்று காலை 10 மணிக்கு ஒட்டன்சத்திரத்துக்கு புறப்பட்டது. இதேபோல் தாராபுரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
2 பஸ்களும் தாராபுரம் அருகே உள்ள கொடுவாய் பகுதியில் காலை 10.45 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சாந்தாமணி(45) உள்பட 2 பெண் பயணிகள் சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்கள்.
மேலும் 2 பஸ்களிலும் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதுபற்றி தெரியவந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தாராபுரத்தை சேர்ந்த ஜெயலட்சுமி(34), சத்தியமங்கலத்தை சேர்ந்த செல்வி(33), மங்கலத்தை சேர்ந்த பவுன்மணி, தேனியை சேர்ந்த பாளையரசு ஆகிய 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஜெயலட்சுமி, பாளையரசு ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #tamilnews