ஓசூர் அருகே வேன் டிரைவர் வெட்டிக் கொலை
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பொம்மாண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 28). இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
முருகேஷ் பொம்மாண்டப்பள்ளி அருகே அந்திவாடி பகுதியில் இரு சக்கர வாகன வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்து நடத்தி வந்தார். மேலும் சொந்தமாக டெம்போ வேன் போன்ற சரக்கு வாகனமும் வைத்து ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் முருகேஷ் கொலை செய்யப்பட்டு அவரது உடல் பொம்மாண்டப்பள்ளியில் இருந்து நஞ்சாபுரம் செல்லும் சாலை அருகில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டிருந்தது. இன்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முருகேசின் கழுத்து பகுதியை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டிருந்தது.
அவர் எதற்காக? கொலை செய்யப்பட்டார் என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என மற்றொரு கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஓசூர் பகுதியில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியும், பீதியும் அடைந்துள்ளனர். #tamilnews