செய்திகள்

பஸ் கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கும்: விக்கிரமராஜா பேட்டி

Published On 2018-01-22 14:09 GMT   |   Update On 2018-01-22 14:09 GMT
அரசு பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வால் பல பொருட்களும் விலை உயரும் ஆபத்து உள்ளது என்று விக்கிரமராஜா கூறினார். #vikramaraja #busfare
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

பேருந்து கட்டண உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வால் பல பொருட்களும் விலை உயரும் ஆபத்து உள்ளது. எனவே தமிழக அரசு இதனை உடனடியாக ரத்து செய்து எளிமையான கட்டண உயர்வைச் செய்திட வேண்டும்.

வணிகவரித்துறை அதிகாரிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள கணக்குகளை மறுஆய்வு செய்வதாக வணிகர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வணிக வரித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்க உள்ளோம். எந்த ஒரு அதிகாரியும் ஜி.எஸ்.டி. வரி பற்றியும், அதனை செலுத்துவது குறித்தும் பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துபவராக இருக்க வேண்டும், அதைவிடுத்து பழைய கணக்குகளை எடுத்துவாருங்கள் எனக் கூறுவதில் உள்நோக்கம் உள்ளதாகக் கருதுகின்றோம்.  

இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.  வரும் 23-ம் தேதி வால்பாறையில் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் ஜி.எஸ்.டி. வரி, தொழிலாளர் நல அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் மூலமாக  தமிழக அரசு சோதனை செய்வதை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews  #vikramaraja #busfare 
Tags:    

Similar News