செய்திகள்

நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2018-01-16 03:47 GMT   |   Update On 2018-01-16 03:47 GMT
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமேசுவரம்:

தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்லும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை சிறைபிடிப்பது, விரட்டியடிப்பது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் 16 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

ராமேசுவரம் மண்டபம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இன்று அதிகாலை இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு விரட்டியடித்தனர். மேலும் படகுகளில் ஏறிய அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறிமுதல் செய்ததோடு மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.

இதையடுத்து மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்ப முற்பட்டனர். அப்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை 4 விசைப்படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர்.

அவர்கள் இன்று காலை காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் ராமேசுவரம், மண்டபம் பகுதி மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews


Tags:    

Similar News