செய்திகள்
தமிழகத்தில் மிக விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்: இல.கணேசன் எம்.பி. பேட்டி
தமிழகத்தில் மிக விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என்று இல.கணேசன் எம்.பி. கூறினார்.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பா.ஜ.க. மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல.கணேசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
தமிழகத்தில் மிக விரைவில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கும். போக்குவரத்து துறை தொழிலாளர்கள் தங்களது பிரச்சினைகளை தீர்த்து வைக்ககோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிரச்சினையை மக்களுக்கு புரிய வைக்கும் நோக்கத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் நியாயமானது. ஓய்வூதியத்தை கேட்டு பெறுவது அவர்கள் உரிமை. தமிழக அரசு நிலுவை தொகை அறிவிப்பு நல்ல செய்தியாகும்.
கவிஞர் வைரமுத்து ஆண்டாளை பற்றி பேசியது கண்டிக்கத்தக்கது. அதற்காக வைரமுத்து வருத்தம் தெரிவித்து இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். தமிழக கவர்னர் மாவட்டம் தோறும் ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் முறைகேடு என்பதற்கு வாய்ப்பில்லை.
ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆகிறது. இனியாவது தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தீவிரமாக செயல்பட வேண்டும். இதுவே என் பொங்கல் வாழ்த்தாக தெரிவிக்கிறேன். மேலும் அரசியல் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. ரஜினி வரட்டும் பொருத்திருந்து பார்ப்போம். ஆன்மிக அரசியல் என்பது அறவழி அரசியல் ஆகும். யார் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க. அதை வரவேற்கின்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தேசிய செயற்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். #tamilnews #ilaganesan