மீஞ்சூர் அருகே கிணற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
பொன்னேரி:
மீஞ்சூர் இந்திரா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஜய்குமார் (வயது 15). மீஞ்சூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று மதியம் அவர் நண்பர்கள் 3 பேருடன் கொரஞ்சிரெட்டி பாளையத்தில் உள்ள கிணற்றில் குளித்தார்.
அப்போது அஜய்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் பயந்து போன அவர்கள் யாரிடமும் கூறாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பாத அஜய்குமாரை பெற்றோர் தேடி வந்தனர். நண்பர்களிடம் விசாரித்த போது அஜய்குமார் கிணற்றில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்த வந்து கிணற்றில் கிடந்த அஜய்குமார் உடலை மீட்டனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.