செய்திகள்

ராமேசுவரம் மண்டபத்தில் காரில் கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

Published On 2017-12-11 06:03 GMT   |   Update On 2017-12-11 06:03 GMT
மண்டபம் கடற்கரை பகுதியில் காருடன் ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த வாலிபரும் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம்:

ராமேசுவரம், மண்டபம் கடல் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள், தங்கம் போன்றவை கடத்தப்படுவதும், அங்கிருந்து இங்கு கொண்டு வரப்படுவதும் சட்ட விரோதமாக நடப்பதாக புகார்கள் உள்ளன.

இதனைத் தடுக்க கியூ பிரிவு போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் கியூ பிரிவு போலீசாரும், மாவட்ட தனிப்பிரிவு போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு கார் வந்தது. அதனை சுற்றி வளைத்து போலீசார் சோதனை நடத்தினர். காருக்குள் 150 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 1 கோடி.

இதனைத் தொடர்ந்து காரில் இருந்த தொண்டியைச் சேர்ந்த சித்திக்அலி (வயது 38) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காருடன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி சித்திக் அலியை கைது செய்தனர். கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags:    

Similar News