செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க வந்தவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த காட்சி.

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 5 பேர் ஜெயிலில் அடைப்பு

Published On 2017-11-14 04:04 GMT   |   Update On 2017-11-14 04:04 GMT
நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற 5 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
நாகர்கோவில்:

நெல்லையில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட 4 பேர் கலெக்டர் அலுவலகம் வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக நெல்லை மட்டும் அல்லாது அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமையான நேற்று குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இதையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமையில் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த கேப்டன் சிவா (50), சுசீந்திரத்தைச் சேர்ந்த ஆவுடைக்கண்ணன் (வயது 46), அவரது மனைவி கவிதா (38), முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ரமா (63) ஆகிய 5 பேர் வந்தனர்.

அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கப்போவதாக அறிவித்தனர். அவர்களில் ஆவுடைக்கண்ணன் என்பவர் பாட்டிலில் தான் வைத்திருந்த மண்எண்ணையை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். உடலில் மண்எண்ணை ஊற்றப்பட்டு இருந்ததால் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை கைது செய்தனர்.

இதேபோல அவருடன் வந்த அவரது மனைவி கவிதா உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஆவுடைக்கண்ணன் கூறுகையில் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்காததை கண்டித்து மனைவியுடன் தீக்குளிப்பு போராட்டம் நடத்த வந்ததாக தெரிவித்தார். இதேபோல அவருடன் வந்த மற்றவர்களும் தங்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வந்ததாக கூறினர்.

கைதான 5 பேர் மீதும் தீக்குளிக்க முயற்சி செய்தல், போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் என 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கவிதா, ரமா ஆகியோர் தக்கலை ஜெயிலிலும், ஆவுடைக்கண்ணன், கேப்டன் சிவா, வக்கீல் பால்ராஜ் ஆகியோர் நாகர்கோவில் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News