செய்திகள்

செல்வபுரத்தில் இன்று ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை

Published On 2017-09-22 12:27 GMT   |   Update On 2017-09-22 12:27 GMT
செல்வபுரத்தில் ஆட்டோ டிரைவரை மர்ம கும்பல் வெட்டிக்கொலை செய்தது. தடுக்க முயன்ற நண்பரையும் சரமாரி வெட்டினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை:

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த். ஆட்டோ டிரைவர். இவர் இன்று மதியம் அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மற்றும் நண்பர்கள் 2 பேரும் ஐ.ஓ.பி. காலனியில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வாகனத்தில் ஒரு கும்பல் வந்தது. கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அவர்கள் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் தலையில் வெட்டுபட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதை தடுக்க முயன்ற செல்வராஜையும் கும்பல் வெட்டி சாய்த்தனர். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். உடனே கும்பல் வாகனத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயமடைந்த செல்வராஜை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் செல்வபுரத்தில் வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதற்கு பழிக்குபழியாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. கொலை கும்பல் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News