செய்திகள்
திருவாரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் மறியல்
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று நீட் தேர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
நீட் தேர்வால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். மாணவி அனிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் திருநெய்பேர் பள்ளி மாணவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இன்று நீட் தேர்வை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து விட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதா தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.