செய்திகள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு

Published On 2017-08-03 07:58 GMT   |   Update On 2017-08-03 07:58 GMT
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று மாலை காரைக்கால் திரும்புகின்றனர்.
ராமேசுவரம்:

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்களும் இன்று மாலை காரைக்கால் திரும்புகின்றனர்.

கடந்த 2 மாதங்களில் இலங்கை கடற்படையினரால், தமிழகம் மற்றும் கரைக்காலைச் சேர்ந்த 93 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டன. இதன் பலனாக 77 மீனவர்களை விடுதலை செய்வதாக கடந்த 28-ந் தேதி இலங்கை அரசு அறிவித்தது.

அதன்படி ராமேசுவரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், நம்புதாளையைச் சேர்ந்த 6, மண்டபத்தைச் சேர்ந்த 12, புதுக்கோட்டையைச் சேர்ந்த 18, காரைக்காலைச் சேர்ந்த 17, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 பேர் என 77 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று காலை 6 மணிக்கு, இலங்கை கடற்படை கப்பல் மூலம் அங்கிருந்து புறப்பட்டனர். மதியம் 1.30 மணிக்கு இந்திய கடல் எல்லையில், இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று மாலை காரைக்கால் வருகின்றனர். அதன் பின்னர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.

கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 3 பேரும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 8 பேரும், நம்புதாளையைச் சேர்ந்த 4 பேரும் இலங்கை சிறைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News