செய்திகள்

நெருக்கமாக இருந்த நேரத்தில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி கைது

Published On 2017-07-22 12:18 GMT   |   Update On 2017-07-22 12:18 GMT
நெருக்கமாக இருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

குடியாத்தம்:

குடியாத்தம் அருகே உள்ள லிங்குன்றம் கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 32), டெய்லர். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் ஜெகதீசன் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.

அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது ஜெகதீசனின் மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் துடித்து கொண்டிருந்தார். அப்போது அவர், தனது மர்ம உறுப்பை மனைவி அறுத்துவிட்டு ஓடிவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் ஜெகதீசனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் வி.கோட்டா ராமகுப்பத்தில் தாய் வீட்டில் பதுங்கியிருந்த சரவஸ்வதியை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதாவது:- ஜெகதீசனும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தோம். கடந்த ஆண்டு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆந்திர மாநிலம் வி.கோட்டா ராமகுப்பத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தேன்.

அப்போது கணவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இருவரும் நெருக்கமாக இருந்த போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியால் கணவரின் மர்ம உறுப்பை அறுத்துவிட்டு ஓடிவிட்டேன் என்றார்.

மர்ம உறுப்பை தான் வைத்திருந்த மஞ்சள் பையிலேயே வைத்திருந்தார். அதனையும், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News