செய்திகள்
தலையணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து வரும் காட்சி.

மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: தண்ணீர் வரத்து அதிகரித்ததால் களக்காடு தலையணை இன்று திறப்பு

Published On 2017-06-28 07:39 GMT   |   Update On 2017-06-28 07:39 GMT
மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை தலையணை திறக்கப்பட்டது.
களக்காடு:

களக்காடு புலிகள் காப்பக மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை உள்ளது. தென் மாவட்டங்களில் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் களக்காடு பகுதியில் வறட்சி ஏற்பட்டது. ஆறு, குளங்கள், கால்வாய்கள் தண்ணீர் இன்றி வறண்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை இன்றி வறட்சி நிலவியது. இதனால் நீர்நிலைகள் வற்றியது. தலையணையிலும் தண்ணீர் வற்றியது.

இதையடுத்து கடந்த மே 1-ந் தேதி தலையணை மூடப்பட்டது. தலையணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையிலும் சாரல் மழை தீவிரமடைந்துள்ளதால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் முருகானந்தம் உத்தரவின் பேரில் இன்று காலை தலையணை திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





Tags:    

Similar News