செய்திகள்

ரவுடி ஆந்திராவில் படுகொலை: 7 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது

Published On 2017-06-26 07:23 GMT   |   Update On 2017-06-26 07:23 GMT
சென்னை ரவுடி ஆந்திராவில் 7 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் வசித்தவர் பப்லு (வயது 32) ரவுடிகள் பட்டியலில் இருந்தார்.

இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு ரஞ்சித் என்பவரை கொலை செய்த வழக்கு பப்லு மீது உள்ளது. அண்ணாமலை என்பவரிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கும் உள்ளது.

வழக்குகளுக்கு பயந்து பப்லு ஆந்திராவுக்கு ஓடினார். சித்தூர் மாவட்டம் வரதபாளையம் என்ற இடத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

நேற்று மதியம் பப்லு வீட்டில் இருந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்தது. அவர்கள் பப்லுவை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சத்தியவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ரவுடி பப்லுவின் உடல் இன்று வியாசர்பாடி கொண்டுவரப்படுகிறது. இதனால் வியாசர்பாடி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொலையுண்ட பப்லு, பிரபல ரவுடி நாகேந்திரனின் கூட்டாளி ஆவார். நாகேந்திரன் ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருக்கிறார்.
Tags:    

Similar News