செய்திகள்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக இந்த ஆண்டு 500 படகுகளை கட்டமைக்க நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

Published On 2017-05-26 02:26 GMT   |   Update On 2017-05-26 02:26 GMT
ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு வசதியாக இந்த ஆண்டில் 500 நவீன படகுகளை கட்டமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக பாக் நீரிணைப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு வசதியாக தற்போது பயன்படுத்தும் படகுகளுக்கு பதிலாக பெரிய அளவில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உகந்த 2 ஆயிரம் நவீன படகுகளை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த படகுகள் இந்த நிதி ஆண்டில் இருந்து 3 நிதி ஆண்டுகளுக்குள் கட்டப்படும். இந்த நிதி ஆண்டில் 500 படகுகளும், அடுத்த நிதியாண்டில் மேலும் 500 படகுகளும், பின்னர் வரும் நிதி ஆண்டில் ஆயிரம் படகுகளும் கட்டப்படும்.

இந்த நிதி ஆண்டில் 500 படகுகளை கட்ட ரூ.285.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய அரசின் பங்கு ரூ.200 கோடியாகும். மீதமுள்ள ரூ.85.25 கோடி, தமிழக அரசின் பங்காகும். மொத்தமுள்ள 2 ஆயிரம் படகுகளையும் கட்டமைக்க ரூ.800 கோடி செலவிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News