செய்திகள்
பாலமுருகன் தீக்குளிக்க முயன்றதையும், அதனை போலீசார் ஒருவர் தடுத்து நிறுத்துவதையும் படத்தில் காணலாம்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

Published On 2017-04-27 11:38 GMT   |   Update On 2017-04-27 11:39 GMT
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது24). விவசாயி. இவரது மனைவி கற்பகவள்ளி. பாலமுருகனுக்கு சொந்தமாக மானூர் அருகே தெற்கு வாகைகுளம் பகுதியில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது வறட்சி காரணமாக இந்த நிலம் தரிசாக உள்ளது.

இந்நிலையில் பால முருகனுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் காற்றாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். கடந்த சில நாட்களாக அந்நிறுவனத்தினர் விவசாய நிலத்தில் நடைபாதை அமைத்து மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு பாலமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மானூர் போலீசார் மற்றும் பல்வேறு அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தார். ஆனால் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து மேலும் யாரிடமாவது புகார் செய்தால் உன் மீது வழக்குப்போடுவேன் என மானூர் போலீஸ் அதிகாரி ஒருவர் பாலமுருகனை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த பாலமுருகன் மண்எண்ணையை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்தனர். பின்பு கலெக்டரிடம் அழைத்து சென்றனர்.

தனது விவசாய நிலத்தை ஆக்கிரமித்து காற்றாலை அமைக்கப்படுவதை தடுத்து தனக்கு மிரட்டல் விடுத்து மானூர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கருணாகரனிடம், பாலமுருகன் புகார் மனு கொடுத்தார். விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News