திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நர்சிங் மாணவி விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கொண்டி செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். கூலி தொழிலாளி. இவரது மகள் கோமதி (வயது 17). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி கோமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் ஒருவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த மாணவரை சத்தம் போட்டு இனிமேல் இந்த பகுதிக்கு வரக்கூடாது எனக் கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் மனம் உடைந்த மாணவி கோமதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து திடீரென குடித்து விட்டார். இந்த விஷம் உடல் முழுவதும் பரவியது. இதனால் கோமதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார்.
இதனை கண்டதும் அவரது உறவினர்கள் கோமதியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி கோமதி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து காரி மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.