ஆம்பூர் போலீஸ் நிலையத்தில் நர்சிங் மாணவி காதலனுடன் தஞ்சம்: உறவினர்கள் முற்றுகை
வேலூர்:
ஆம்பூர் டவுன் இந்திரா நகர் அழகாபுரி பகுதியை சேர்ந்தவர் சோனியா (வயது 19). நர்சிங் மாணவி. இவர், கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. மாயமாகிவிட்டார்.
பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் சோனியாவை காணவில்லை. இதையடுத்து, ஆம்பூர் டவுன் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மாயமான சோனியா, அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் (19) என்ற வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டு ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இன்று தஞ்சமடைந்தார்.
விசாரணையில் சோனியாவும், சரத்குமாரும் காதலித்து வந்ததும், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டு தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சோனியா காதலனை கரம் பிடித்து, பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சமடைந்து இருப்பது தெரியவந்தது. இதையறிந்த இருத்தரப்பினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். காதல் ஜோடியை தாக்க பாய்ந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இரு தரப்பினரையும் போலீசார் சமரசம் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.