செய்திகள்

ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-03-26 09:53 GMT   |   Update On 2017-03-26 09:53 GMT
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயபுரம்:

ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் (வயது 53). ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்.

ஓ.பி.எஸ். தனி அணியாக பிரிந்தது முதல் அவரது அணியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார். தற்போது ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கண்ணப்பன் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

கண்ணப்பன் இறந்தது தொடர்பாக அவரது மனைவி லதா கூறுகையில், “நேற்று மதியம் என் கணவர் வீட்டில் இருந்த போது 2 பேர் வந்தனர். ஓ.பி.எஸ். அணிக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றக் கூடாது என்று மிரட்டினார்கள். அதனால் எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில், கண்ணப்பனுக்கு நீரிழிவு நோய் இருந்ததால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட கண்ணப்பனுக்கு சத்யா என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

Similar News