செய்திகள்

பாம்பை விரட்ட வாழை தோட்டத்திற்கு தீ வைத்த விவசாயி, மரங்கள் எரிந்து நாசம்

Published On 2017-03-25 17:32 GMT   |   Update On 2017-03-25 17:32 GMT
குளித்தலை அருகே பாம்பை விரட்ட வாழை தோட்டத்திற்கு விவசாயி தீ வைத்ததால் ஏராளமான மரங்கள் எரிந்து நாசம் அடைந்தன.
குளித்தலை:

குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் நடராஜன்(வயது 66). விவசாயியான இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தனது தம்பியின் வாழை தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தார்.

அப்போது தோட்டத்தில் பாம்பு இருந்ததை நடராஜன் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்த பாம்பை விரட்ட முயன்றார். பாம்பு போகாமல் அதே இடத்தில் இருந்துள்ளது. இதையடுத்து பாம்பை விரட்டுவதற்காக அருகில் கிடந்த வாழை சருகுகளுக்கு தீ வைத்துள்ளார். இதில் தீ மளமளவென பரவி சுமார் 1½ ஏக்கர் வாழை தோட்டம் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் இளைஞர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து தகவலறிந்த முசிறி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இருப்பினும் தீ எரிந்து கொண்டிருந்த இடம் அருகே தீயணைப்பு வண்டியை கொண்டுசெல்ல போதுமான இடவசதி இல்லை.

இதையடுத்து அப்பகுதி இளைஞர்களுடன், தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஏராளமான வாழை மரங்கள் எரிந்து நாசமாயின. மேலும் வாழை மரங்களில் இருந்த அனைத்து வாழைத்தார்களும் வெட்டப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News