செய்திகள்
அருப்புக்கோட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்து: பெண் பலி
அருப்புக்கோட்டை அருகே கார் டயர் வெடித்த விபத்தில் கணவருடன் சென்ற பெண் பலியானார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
தூத்துக்குடி மாவட்டம் மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது27). இவரது மனைவி பிரியா (25). ஒசூரில் என்ஜினீயராக உள்ள சங்கர், 2 நாள் விடுமுறையில் காரில் ஊருக்கு வந்தார்.
நேற்று மனைவி பிரியாவுடன் ஊரில் இருந்து மதுரைக்கு காரில் புறப்பட்டார். அருப்புக்கோட்டை -பந்தல்குடி இடையே உள்ள கோவிலாங்குளம் பகுதியில் கார் வந்தபோது, திடீரென டயர் வெடித்தது.
இதனால் கார் நிலைதடு மாறி தறிக்கெட்டு ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த பிரியா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கர் காயத்துடன் மீட்கப்பட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.