செய்திகள்

ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கு: கைதான பெண் ஜாமீன் மனு தாக்கல்

Published On 2017-03-15 08:39 GMT   |   Update On 2017-03-15 08:39 GMT
ஜெயலலிதா மரணம் பற்றிய வழக்கில் கைதான ராமசீதா ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை:

சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் ராமசீதா. இவர், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் அலுவலகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், தான் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்வதாகவும், ஜெயலலிதா இறந்த நிலையில் தான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார் என்றும் பேசினார்.

மேலும், இந்த உண்மையை மறைத்ததால், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செய்த வேலையை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறினார். இவரது பேச்சு இணையதளத்தில் வெளியானது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ராமசீதா டாக்டர் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கடந்த பிப்ரவரி 26-ந்தேதி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ராமசீதா மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கேட்டார். இதையடுத்து விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News