செய்திகள்

தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published On 2017-02-27 03:45 GMT   |   Update On 2017-02-27 03:46 GMT
தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவை விட குறைவாக பெய்ததால் பல்வேறு இடங்களில் வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது.

சென்னையில் நேற்று வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைவாகவே காணப்பட்டது. இந்த நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தின் தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் வட மாவட்டங்களில் வறட்சி நிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டமாக காணப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Similar News