செய்திகள்

வாள் சண்டை வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.5½ லட்சம் நிதிஉதவி: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Published On 2017-02-24 08:39 GMT   |   Update On 2017-02-24 08:39 GMT
வாள் சண்டை வீராங்கனை பவானிதேவிக்கு ரூ.5½ லட்சம் நிதிஉதவி தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பவானி தேவியின் தாயாரிடம் வழங்கினார்.

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விளையாட்டுத் திறமைகளின் அடிப்படையில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லக் கூடிய தலை சிறந்த ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு அயல்நாட்டுப் பயிற்சி, அயல்நாடுகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பிற்கான செலவினம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேவையான இதர செலவினங்களுக்கான தொகை வழங்கப்பட்டு சர்வதேசப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில் வழி வகுக்கப்பட்டது.


அதனடிப்படையில், வாள் சண்டை வீராங்கனையான பவானிதேவி இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, இதுவரையில் ரூ.22,04,512 வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 17.11.2016 முதல் 20.11.2016 முடிய பிரான்ஸ் நாட்டின் ஓர்லின்ஸ் நகரில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள் சண்டைப் போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், கடந்த 16.12.2016 முதல் 18.12.2016 முடிய மெக்ஸிகோ நாட்டின் கேன்கன் நகரில் நடைபெற்ற வாள் சண்டை கிராண்ட்ப்ரி போட்டிகளில் கலந்து கொண்டமைக்காகவும், செலவினத் தொகையாக ரூ.5,43,386 அனுமதித்துள்ளது.

இந்த தொகைக்கான காசோலையினை முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி இன்று பவானி தேவியின் தாயாரிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் செங்கோட்டையன், வெற்றிவேல் எம்.எல்.ஏ., அதிகாரிகள் டாக்டர் ராஜேந்திர குமார், அஷோக் டோங்ரே மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News