செய்திகள்
அதிமுகவில் பதவி வெறியுடன் போட்டி நிலவுகிறது - மு.க.ஸ்டாலின்
அதிமுக-வில் பதவி வெறியுடன் போட்டி நிலவுவதாகவும், எத்தனை பிரிவாக பிரிந்தாலும் அதிமுக-வானது திமுக-வுக்கு எதிரிதான் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவும் சூழ்நிலையில், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லாததால் மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். மத்திய அரசின் நீட் தேர்வு குறித்த குழப்பம் மானவர்களிடம் நிலவுகிறது, அதற்கான எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை தொடர்கதையாகி வருகிறது, அதற்கான நிவாரணம் எதுவும் அரசு அறிவிக்கவில்லை.
அதிமுக.வில் யார் தலைமைப் பொறுப்பை கைப்பற்றுவது என பதவி வெறி நிலவுகிறது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காபந்து முதல்வராக இருந்தும் எந்தக் கவலையும் இல்லாமல் தொடர்ந்து இருக்கிறார். கவர்னர் உடனடியாக தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல் சாசனத்தின் மாண்பை காக்க வேண்டும்.
“ஓ.பன்னீர் செல்வத்திற்கு நீங்கள் ஆதரவாக இருப்பதாக சசிகலா குற்றம் சாட்டியுள்ளாரே?” என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின்,” அதிமுக எத்தனை பிரிவாக உடைந்தாலும், அக்கட்சி எங்களுக்கு எதிரிதான். சசிகலாவின் கூற்றுக்கு பதில் சொல்லி, எனது நேரத்தையும், தகுதியையும் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை” என மு.க.ஸ்டாலின் கூறினார்.