செய்திகள்

கயத்தார் அருகே வாலிபர் வெட்டிக்கொலை

Published On 2017-01-21 10:33 GMT   |   Update On 2017-01-21 10:33 GMT
கயத்தார் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.
கயத்தார்:

கயத்தார் அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தை சேர்ந்தவர் முருகையா. இவரது மகன் சீனிப்பாண்டி(வயது21). இவர் ஊர் ஊராக சென்று கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை இவர் தனது மோட்டார்சைக்கிளில் அங்குள்ள தேவர்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது சீனிப் பாண்டியின் உறவினரும் பிரபல ரவுடியுமான அண்ணாமலை(35) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென்று சீனிப் பாண்டியை வழிமறித்து தகராறு செய்தார். பின்பு தான் வைத்திருந்த அரிவாளால் சீனிப்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சீனிப்பாண்டி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அண்ணாமலை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுபற்றி கயத்தார் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் சீனிப்பாண்டியின் உறவினர்கள் அங்கு கூடினர். கொலையாளியை கைது செய்ய கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கொலையாளி அண்ணாமலையை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அண்ணாமலையை தேடி பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட சீனிப்பாண்டிக்கு 3 அண்ணன்களும், ஒரு தங்கையும் உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் கயத்தார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News