செய்திகள்
பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி ரெயில்வே பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

Published On 2017-01-20 05:26 GMT   |   Update On 2017-01-20 05:26 GMT
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககோரி மதுரை எல்லீஸ் நகர் ரெயில்வே பாலத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககோரி மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் மதுரை எல்லீஸ் நகர் ரெயில்வே மேம்பாலத்தில் ஒரு வாலிபர் திடீரென்று ஏறினார். பின்னர் அவர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லா விட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் பாலத்தில் ஏறி நின்ற வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் எல்லீஸ் நகரைச் சேர்ந்த கார்த்திக் என்றும், லோடுமேனாக வேலை பார்த்து வருபவர் என்றும் தெரிய வந்தது. அவரை உடனே கீழே இறங்கும்படி அறிவுரை கூறினர். ஆனால் அந்த வாலிபர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி கொண்டே இருந்தார்.

பின்னர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், அந்த வாலிபரை கீழே இறங்கும் படி கூறினர். இதனை தொடர்ந்து அவர் பாலத்தில் இருந்து கீழே இறங்கினார்.

வாலிபரின் தற்கொலை மிரட்டலால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Similar News