செய்திகள்

விளாத்திகுளம் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2016-12-30 06:46 GMT   |   Update On 2016-12-30 06:46 GMT
விளாத்திகுளம் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விளாத்திகுளம்:

வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் தமிழகத்தில் விவசாய பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையை நம்பி நெல் மற்றும் பயிறு வகைகளை விளைநிலங்களில் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஒன்றியம் கம்பத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 58). இவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயிறு ஆகியவை பயிரிட்டிருந்தார். வானம் பார்த்த பூமியான இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் மழையின்றி கருகத் தொடங்கின.

இதனால் மனவேதனையில் இருந்த பவுன்ராஜ் நேற்று தோட்டத்திற்கு சென்றார். அங்கு பூச்சி மருந்தை குடித்து விட்டு கருகிய பயிர்களுக்கு மத்தியில் படுத்துவிட்டார். நீண்ட நேரம் அவரை காணாததால் உறவினர்கள் தோட்டத்திற்கு தேடிச் சென்றனர். அப்போது அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பவுன்ராஜை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டபோது வழியில் பவுன்ராஜ் இறந்தார். இந்த சம்பவம் குறித்து புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவுன்ராஜ் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார். மேலும் இவர் புதூர் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News