செய்திகள்

கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் மீனவர்கள் பங்கேற்கும் விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Published On 2016-12-08 09:56 GMT   |   Update On 2016-12-08 09:56 GMT
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய கட்டிட திறப்பு விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க கோரிய வழக்கு விசாரணை 19-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை:

தமிழர் தேசிய முன்னனியின் இளைஞரணி செயலர் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து மீனவர்களும், பக்தர்களும் 35 நாட்டுப்படகுகள், 106 இயந்திர படகுகளில் பங்கேற்பது வழக்கம்.

இரு நாட்டு பங்குதந்தைகள் இணைந்து திருப்பலிகள் நடத்துவார்கள். தற்போது அந்தோணியார் ஆலயத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்படுகிறது.

எனவே கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் அரசிடம் இதுகுறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதன்படி இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், அந்தோணியார் ஆலய திறப்பு விழா தொடர்பான அழைப்பிதழ்களை இலங்கை பி‌ஷப் ராமநாதபுரம் பி‌ஷப்பிற்கு அனுப்பி உள்ளார். 20 அழைப்பிதழ்களை அவர் அனுப்பி உள்ளார். அதன்படி விழாவில் பங்கேற்பவர்களை ராமநாதபுரம் பி‌ஷப் தேர்வு செய்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார்.

இந்த தேர்வு பட்டியலுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையில் அந்தோணியார் ஆலய புதிய கட்டிட திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ராமநாதபுரம் பி‌ஷப்பை எதிர்மனுதாரராக சேர்த்து வழக்கு விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

Similar News