செய்திகள்
விவசாயி சுப்பிரமணியன் மனைவியின் மடியில் பிணமாக கிடந்தகாட்சி.

வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து மரணம்

Published On 2016-12-04 05:25 GMT   |   Update On 2016-12-04 05:25 GMT
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாபநாசம்:

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) விவசாயி. இவர் நேற்று பாபநாசம் கீழவீதியில் செயல்படும் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு பணம் எடுக்க சென்று வரிசையில் நின்றார். அவரது மனைவி தையல் நாயகியும் கணவருடன் சென்று இருந்தார்.

சுப்பிரமணியன் வங்கியில் பணம் எடுக்கும் படிவத்தில் கையெழுத்திட்ட போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை தாங்கி பிடித்து தையல் நாயகி தனது மடியில் கிடத்தினார். அப்போது சுப்பிரமணியன் உயிர் பிரிந்தது. இதனை கண்ட அவரது மனைவி கதறி அழுதார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பாபநாசம் தாசில்தார் திருமால், இன்ஸ்பெக்டர் மீனா, வருவாய் ஆய்வாளர் பிராங்ளின், கிராம நிர்வாகி அலுவலர் செல்வராணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியன் உடலை மீட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்ற விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பாபநாசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Similar News