செய்திகள்

பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை

Published On 2016-12-02 05:03 GMT   |   Update On 2016-12-02 05:03 GMT
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக உள்ளது.
கூடலூர்:

தேனி அருகே கூடலூரை அடுத்து கேரள பகுதியான தேக்கடியில் முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டை போன்று உயரவில்லை. கடந்த ஆண்டு இதே நாளில் 140 அடி வரை தண்ணீர் இருந்தது. ஆனால் இந்த கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்கே சிக்கல் எழுந்தது.

எனவே வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் இருந்தனர். அதுவும் கைகொடுக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது உருவான புயல் சின்னம் காரணமாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் விடிய விடிய பலத்த மழை பெய்தது.

இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் 110.80 அடியாக உள்ளது. அணைக்கு வெறும் 16 கனஅடிநீர் மட்டுமே வருகிறது.கம்பம் பள்ளத்தாக்கு பாசனம் மற்றும் குடிநீருக்காக 200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் பாசனத்துக்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. எனவே வைகை அணையின் நீர்மட்டம் 22.61 அடியாக நீடிக்கிறது. அணைக்கு 17கன அடிநீர் வருகிறது. மதுரை மாநகர் குடிநீருக்காக 40 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.50அடியாக உள்ளது. அணைக்கு 5 கன அடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறந்து விடப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.56 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், திறப்பும் இல்லை.

தேனி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

பெரியாறு அணை- 4, தேக்கடி- 5.2, கூடலூர்-2, உத்தமபாளையம்- 3, வீரபாண்டி- 6, வைகை அணை-12.6, சோத்துப்பாறை அணை- 9, கொடைக்கானல்- 38.2. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News