செய்திகள்

மழை இல்லாததால் பூண்டி-செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து நின்றது

Published On 2016-11-05 08:33 GMT   |   Update On 2016-11-05 08:33 GMT
நேற்று மழை பெய்யாததால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வருவது நின்று விட்டது.
திருவள்ளூர்:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் போதிய தண்ணீர் இல்லை. மழை நீரை எதிர்பார்த்து தான் 4 ஏரிகளும் உள்ளன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பெய்த மழையின் காரணமாக 4 ஏரிகளுக்கும் மழைநீர் வந்து கொண்டிருந்தது. இதனால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மழை பெய்யாததால் பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் வருவது நின்று விட்டது.

பூண்டி ஏரிக்கு ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 230 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. ஏரியில் இருந்து குடிநீருக்காக புழல் ஏரிக்கு 230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நேற்று முதல் மழை தண்ணீர் வருவது நின்றுவிட்டது. இங்கிருந்து குடிநீருக்காக 151 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

இதேபோல் புழல் ஏரிக்கு போதிய அளவு மழைநீர் வராததால் ஏரியில் 440 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. (கொள்ளளவு 3300) ஏரியில் இருந்து 140 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

சோழவரம் ஏரியில் 881 மில்லியன் கனஅடிக்கு தற்போது 78 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. போதிய மழைநீர் வராததால் ஏரிகள் பாதி அளவு கூட நிரம்பவில்லை.

Similar News