செய்திகள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி முதல்வருக்கு உடல்நலக்குறைவு

Published On 2016-10-25 06:08 GMT   |   Update On 2016-10-25 06:08 GMT
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியான வழக்கில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி முதல்வருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
திருச்சி:

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந்தேதி ஒரு தனியார் நர்சரி பள்ளியில் தீ விபத்து நடந்தது. இதில் தீயில் கருகி 94 குழந்தைகள் பரிதாபமாக பலியாகினர். 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் பள்ளி தாளாளர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மனைவியும், பள்ளியின் முதல்வருமான சரஸ்வதி உள்பட 7 பேருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதில் பள்ளி முதல்வர் சரஸ்வதி உள்பட தண்டனை பெற்ற 5 பேர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் முதல்வர் சரஸ்வதிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. 84 வயதான அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதற்காக அவர் சிறையில் இருந்த படியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு சரஸ்வதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து திருச்சி மத்திய பெண்கள் சிறை கண்காணிப்பாளர் கோமளாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு திருச்சி பெண்கள் மத்திய சிறையில் இருந்து வாகனம் மூலம் சரஸ்வதி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக மகளிர் போலீசாரும் உடன் சென்றனர்.

சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நேற்று இரவு திருச்சி மத்திய பெண்கள் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News