செய்திகள்
குற்றாலத்தில் எண்ணெய் குளியலால் தண்ணீர் மாசுபடுமா?: ஆய்வு மேற்கொள்ள ஐகோர்ட்டு முடிவு
குற்றாலத்தில் எண்ணெய் குளியலால் தண்ணீர் மாசுபடுமா என்பதை நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ள மதுரை ஐகோர்ட்டு முடிவு செய்துள்ளது.
oil bath in kutralam water pollution review High Court decision
மதுரை:
நெல்லை மாவட்டம் குற்றால அருவியில் சோப்பு, ஷாம்பு, சீயக்காய் பயன்படுத்தவும், எண்ணெய் குளியல் மேற்கொள்ளவும் மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் குற்றாலத்தில் மசாஜ் மையங்கள் நடத்தி வந்தவர்கள் எண்ணெய் குளியலுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதேபோன்று சோப்பு, சீயக்காய் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுமா, இல்லையா என்பதை சுற்றுச்சூழல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்திருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யாமல் தடை விதிக்கப்பட்டதால் ஏராளமானோர் தொழிலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக் கின்றனர்” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
“சோப்பு, சீயக்காய், எண்ணெய் போன்றவற்றால் தண்ணீர் மாசுபடுமா என்பதை நிபுணர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளலாம். ஆய்வு அறிக்கையில் தண்ணீர் மாசுபடாது என்று தெரியவந்தால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்யலாம். இல்லாத பட்சத்தில் தடையை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்படும்.
நிபுணர் குழுவில் யார், யாரை நியமிக்கலாம் என்பது குறித்து இந்த வழக்கில் ஆஜராகும் வக்கீல்கள், அரசு தரப்பு வக்கீல்கள் வருகிற 26-ந் தேதி தெரிவிக்க வேண்டும்.”
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.