செய்திகள்

42 கிரானைட் முறைகேடு வழக்குகள் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைப்பு: மேலூர் கோர்ட்டு உத்தரவு

Published On 2016-08-30 11:14 GMT   |   Update On 2016-08-30 11:14 GMT
பி.ஆர்.பி. நிறுவனம் மீதான 42 முறைகேடு வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

மேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பட்டா நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்தது, சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது தொடர்பாக, பி.ஆர்.பி. நிறுவனம் மீது மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சுப்பிரமணியன் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் 42 வழக்குகளின் விசாரணை இன்று நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது அரசு தரப்பு சாட்சிகளாக சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஜான் ஜேம்ஸ், ரமேஷ், ரமேஷ் குமார் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் அளித்த ஆதாரங்களில் முகாந்திரம் இல்லை என்று, பி.ஆர்.பி தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 4-ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், அன்றையதினம் வழக்கு முகாந்திரத்துக்குரிய ஆதாரங்களுடன் அரசு தரப்பு சாட்சியங்கள் ஆஜராகுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News