விஜயகாந்த் முதல்வரானதும் பாலாறு-தென்பெண்ணை ஆறுகள் இணைக்கப்படும்: பிரேமலதா பேச்சு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை கிராமத்தில் நேற்று பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
திருப்பத்தூர் தொகுதி எந்த வளர்ச்சியும் அடையவில்லை. கடந்த 5 ஆண்டு ஒன்றிய குழு தலைவராக இருந்தவர் எந்த பணியும் செய்யவில்லை. வளர்ச்சி பணிகள் இல்லை. திராவிட கட்சிகள் 50 ஆண்டு ஆட்சி செய்து தமிழகம் வளர்ச்சியில்லா மாநிலமாக மாறிவிட்டது.
விஜயகாந்த் முதல் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் மது இல்லா தமிழகம் ஊழலற்ற ஆட்சி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு, ரேசன் பொருட்கள் வீடு தேடிவரும். நான் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியும். இங்கு ஓடிக்கொண்டிருந்த பாலாறு இப்போது வறண்டு மணல் கொள்ளையடிக்க பயன்பட்டு கொண்டிருக்கிறது.
விஜயகாந்த் முதல்வரானதும் பாலாறு – தென்பெண்ணை ஆறு இணைக்கப்படும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.