தமிழ்நாடு

ஆயுத பூஜை தொடர் விடுமுறை- சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி வர 1,150 சிறப்பு பஸ்கள்

Published On 2022-10-05 07:09 GMT   |   Update On 2022-10-05 07:09 GMT
  • சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர்.
  • இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

போரூர்:

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்தவர்களை தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர்.

இந்த நிலையில் நாளை வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவார்கள் என்பதால் அவர்களது வசதிக்காக இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

அதன்படி பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் இன்றும் நாளையும் என 2 நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக 1,150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகம் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பஸ்களில் பயணம் செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்கிற இணைய சேவையை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News