செய்திகள்

உலகக்கோப்பை கேப்டன் பதவிக்கு ‘தடை’ ஆபத்தாக இருக்காது: சர்பிராஸ் அகமது

Published On 2019-02-03 13:03 GMT   |   Update On 2019-02-03 13:03 GMT
இனவெறி சர்ச்சையில் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்திருப்பது உலகக்கோப்பை கேப்டன் பதவிக்கு ஆபத்தாக இருக்காது என சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. டர்பனில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது, தென்ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பெலுக்வாயோ குறித்து இனவெறியை தூண்டும் வகையில் பேசியது மைக்கில் பதிவானது.

இதனால் ஐசிசி அவருக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடைவிதித்தது. கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், தற்போது நடைபெற்ற வரும் இரண்டு டி20 போட்டிகளிலும் சர்பிராஸ் அகமது பங்கேற்கவில்லை.

இந்தத்தடை உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்படுவதற்கு ஆபத்தாக இருக்காது என்று சர்பிராஸ் அகமது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘நான் உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பேன். என்றாலும், முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுதான் எடுக்கும்’’ என்றார்.

சர்பிராஸ் அகமது தலைமையில் பாகிஸ்தான் டி20 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பர் ஒன் அணியாக உள்ளது. 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் இவர் தலைமையில்தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News