செய்திகள்

பெர்த் டெஸ்ட்: இந்தியா 283 ரன்னில் ஆல்அவுட்- ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலை

Published On 2018-12-16 06:16 GMT   |   Update On 2018-12-16 06:16 GMT
பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் விராட் கோலி சதத்தால் இந்தியா முதல் இன்னிங்சில் 283 சேர்த்து ஆல்அவுட் ஆனது. #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது. பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 82 ரன்னுடனும், ரகானே 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ரகானே இன்றைய முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலியுடன் ஹனுமா விஹாரி ஜோடி சேர்ந்தார். ஹனுமா விஹாரி நம்பிக்கையுடன் விளையாடினார்.

எதிர்முனையில் விளையாடிய விராட் கோலி ஸ்டார்க் பந்தை பவுண்டரிக்கு விரட்டி 214 பந்தில் 11 பவுண்டரியுடன் சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் 25-வது சதம் இதுவாகும்.

அணியின் ஸ்கோர் 233 ரன்னாக இருக்கும்போது ஹனுமா விஹாரி ஆட்டமிழந்தார். அடுத்து ரிஷப் பந்த் விராட் கோலியுடன் இணைந்தார். மதிய உணவு இடைவேளைக்கு முன் விராட் கோலி 123 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 251 ரன்கள் எடுத்திருந்தது.



அதன்பின் வந்த ஷமி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 36 ரன்கள் சேர்க்க இந்தியா 283 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. கடைசி நான்கு விக்கெட்டுக்களையும் நாதன் லயன் கைப்பற்றினார். நாதன் லயன் 34.5 ஓவர்கள் வீசி 67 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
Tags:    

Similar News