செய்திகள்

நோ-பால் விளம்பரம்: ஜெய்ப்பூர் டிராபிக் போலீசுக்கு பும்ப்ரா பதில்

Published On 2017-06-24 10:22 GMT   |   Update On 2017-06-24 10:22 GMT
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நோ-பால் வீசிய படத்தை விளம்பரமாக பயன்படுத்திய டிராபிக் போலீசாருக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ப்ரா பதிலளித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேஸ்ப்ரிட் பும்ப்ரா. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்ரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் கால் க்ரீஸை தாண்டி வெளியே வந்ததால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் பகர் சமானுக்கு மறுவாழ்வு கிடைத்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் சதம் அடித்தார். அத்துடன் பாகிஸ்தான் 338 ரன்கள் குவித்தது.

பும்ப்ராவின் நோ-பால் இந்தியாவின் வெற்றியை பறித்துவிட்டது. பும்ப்ராவின் கால் க்ரீஸை விட்டு வெளியே வந்த படத்தை வைத்து ஜெய்ப்பூர் டிராபிக் போலீசார் சாலை பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றை தயார் படுத்தியது.



அதில் பும்ப்ரா படத்தை வெளியிட்டு ‘‘கோட்டை கடக்கக்கூடாது. அப்படி கடந்தால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்’’ என்று எழுதியிருந்தது.

இந்த போஸ்டர் சமூக இணையத்தளத்தில் வைரலாக பரவி வர, பும்ப்ரா இதற்கு பதில் அளித்துள்ளார்.

ஜெய்ப்பூர் டிராபிக் போலீசார் பயன்படுத்திய விளம்பரம் குறித்து பும்ப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய நாட்டிற்காக உங்களுடைய சிறந்த படைப்பை கொடுத்த பிறகு, நீங்கள் எவ்வளவு மரியாதை பெற்றீர்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. வெல்டன் ஜெய்ப்பூர் டிராபிக் போலீஸ்’’ என்று எழுதி விட்டு மேலும் ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில் ‘‘இதனால் நான் கவலைப்படவில்லை. நீங்கள் இதுபோன்று உங்களுடைய வேலையில் தவறு செய்தால், அதை நான் வேடிக்கையாக சுற்றிக் காட்டமாட்டேன். ஏனென்றால், மனிதர்களால் தவறு நடக்க இயலும் என்பதை நான் நம்புவேன்’’ என்று எழுதியுள்ளார்.
Tags:    

Similar News