செய்திகள்

சென்னையில் முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி தொடங்கியது

Published On 2017-03-01 14:42 GMT   |   Update On 2017-03-01 14:42 GMT
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் இன்று தொடங்கி நடைபெறுகின்றன.
சென்னை:

தமிழகத்தில் குத்துச்சண்டை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், 2016 – 2017ம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகள் இன்று சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை உறையாற்றி குத்துச் சண்டை போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அரசு முதன்மை செயலர் ராஜேந்திரகுமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மை செயலர்/உறுப்பினர் செயலர் அசோக் டோங்ரே மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து குத்துச்சண்டை போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு எடைப்பிரிவுகளில் 04.03.2017 வரை போட்டிகள் நடைபெறும். இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சுமார் 650 வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டுள்ளனர்.

இப்போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை பெறும் குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக தலா ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக இருவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையாக, மொத்தம் 55 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படவுள்ளது.

Similar News