செய்திகள்

500-வது டெஸ்ட்: தேனீர் இடைவேளை வரை இந்தியா 185/4; புஜரா, விஜய் அரைசதம்- கோலி ஏமாற்றம்

Published On 2016-09-22 08:53 GMT   |   Update On 2016-09-22 08:53 GMT
கான்பூர் 500-வது டெஸ்டில் புஜாரா, முரளி விஜய் அரைசதம் அடித்து அவுட்டானார்கள். விராட் கோலி 9 ரன்னில் ஏமாற்றம் அளித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இது இந்தியாவின் 500-வது டெஸ்ட் என்பதால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெள்ளி நாணயத்தால் டாஸ் சுண்டப்பட்டது. விராட் கோலி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்தியா 6 பேட்ஸ்பேன்கள், இரண்டு வேகப்பந்து மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நியூசிலாந்து 3 சுழற்பந்து வீச்சாளருடன் களம் இறங்கியது. இந்திய அணியில் தவான், மிஸ்ரா இடம்பெறவில்லை.

தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதன்பின் ராகுல் நிதான ஆட்டத்தை கடைபிடித்தார். போல்ட் வீசிய ஆட்டத்தின் 7-வது ஓவரில் மீண்டும் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.

அடுத்த ஓவரில் முரளி விஜய் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார். சுழற்பந்து வீச்சாளர் சான்ட்னெர் வீசிய 11-வது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ராகுல், அந்த ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்தியா 42 ரன்கள் எடுத்திருந்தது.

2-வது விக்கெட்டுக்கு விஜய் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த அணி முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 31 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் சேர்த்துள்ளது. விஜய் 39 ரன்களுடனும், புஜாரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். புஜாரா 62 ரன்கள் எடுத்த நிலையில் சான்ட்னெர் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்னாக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

விராட் கோலி விரைவாக ரன்எடுக்கும் நோக்கத்துடன் விளையாடினார். 10 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் பந்தில் சோதியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்தியா அணி 167 ரன்களில் 3 விக்கெட்டை இழந்தது.

4-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். முதல் மதிய தேனீர் இடைவேளைக்கு சற்று முன் விஜய் 65 ரன்கள் எடுத்த நிலையில் சோதி பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து ரோகித் சர்மா களம் இறங்கினார். முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 59 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்துள்ளது. ரகானே 12 ரன்னுடனும், ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

Similar News