செய்திகள்

ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் பெற முடியாமல் போனதற்கு காரணம் என்ன? - மேரி கோம் பேட்டி

Published On 2016-09-07 07:31 GMT   |   Update On 2016-09-07 07:32 GMT
ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் குறித்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பேட்டி அளித்துள்ளார்.
ஷில்லாங்:

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். விளையாட்டுத் துறையில் இவரது பங்களிப்பைப் பாராட்டும் விதமாக வடகிழக்கு மலை பல்லைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதேபோல் இதேபோல் யு.பி.எஸ்.சி.யின் முதல் பெண் தலைவரான ரோஸ் மிலியன் பாத்யூவுக்கும் (85) பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டமளிப்பு விழாவில் மேரி கோம் பேசுகையில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 2 பதக்கங்கள் மட்டுமே வாங்க முடிந்ததற்கு விளையாட்டுத் துறையில் போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம் என தெரிவித்தார்.

விழாவில் அவர் மேலும் பேசியதாவது:-

ஒலிம்பிக்கில் தகுதி பெறுவதற்கு எனக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால், ஆண் பாக்சர்கள் 5 முதல் 6 வாய்ப்புகள் வரை பெற்றனர். ஆனாலும் அவர்களில் பலர் தகுதி பெறவில்லை. குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தலுக்குப் பிறகு அந்த விஷயங்கள் மாற்றப்படும் என நம்புகிறேன்.

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் நாட்டிற்காக 2 பதக்கங்கள் மட்டுமே பெற்றது ஏமாற்றம் அளிக்கிறது. இதற்கான காரணங்களில், விளையாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம்.

உலக சாம்பியன் ஆவதற்கான எனது முயற்சியில் ஒழுக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கடின உழைப்பு, ஆர்வம், பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவையே வெற்றிக்கான மந்திரங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News