இந்தியா
டெல்லியில் இருந்து பீகார் சென்றபோது ரோமிங் கட்டணமாக ரூ.1 லட்சம் வந்ததால் பெண் அதிர்ச்சி
- வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர்.
- பெண்ணின் பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர் சமீபத்தில் பீகாருக்கு சென்றார். அப்போது அவருக்கு ரோமிங் கட்டணமாக ரூ.1 லட்சம் பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார்.
அதில், இது ஒரு பயங்கரமான மோசடி. நான் பீகாரில் உள்ள வால்மீகி நகரில் இருக்கிறேன். ஏர்டெல் எனக்கு ரூ.1 லட்சம் ரோமிங் பில் அனுப்பி உள்ளது. நான் இந்தியாவிற்குள்ளேயே தான் பயணம் செய்துள்ளேன். எல்லை தாண்டி எங்கும் செல்லவில்லை. சர்வதேச ரோமிங்கிற்கும் ஒப்புதல் அளிக்காத நிலையில் எனக்கு இந்தளவு ரோமிங் பில் வந்துள்ளது.
இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது, எனது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர். பின்னர் எனது மொபைல் எண் துண்டிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். பெண்ணின் இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.