பெங்களூரு குடிநீர் பற்றாக்குறை கவலை அளிக்கிறது: நிர்மலா சீதாராமன்
- பெங்களூரு கடும் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது.
- இது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது என மத்திய நிதி மந்திரி தெரிவித்தார்.
பெங்களூரு:
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் கடந்த மார்ச் மாதம் முதல் தண்ணீர் பஞ்சம் எதிர்கொள்ளப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழியாததால் பெங்களூருவுக்கு நீரை வழங்க முடியாமல் மாநகராட்சியின் நீர் விநியோக வாரியம் பின்னடவை எதிர்கொண்டது. இதனால் டேங்கர் லாரி நீரின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்போது மாசடைந்த நீர் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதன் காரணமாக காலரா போன்ற நோய் பரவல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல் மந்திரி சித்தராமையா ரூ.20,000 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை நிறுத்தி வைத்துள்ளார். இதில் நீர் மற்றும் பாசன பணிகளும் அடங்கியுள்ளன.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பை உறுதி செய்யும் ஜல் ஜீவன் திட்ட பணிகளையும் அவர் நிறுத்தி வைத்துள்ளார். கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகையை கூட கர்நாடக அரசு வழங்கவில்லை.
கர்நாடகாவில் பயங்கரவாத செயல்பாடு அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பப்படுகின்றன என தெரிவித்தார்.