இந்தியா

குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2022-08-17 05:39 GMT   |   Update On 2022-08-17 05:39 GMT
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
  • டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

புதுடெல்லி:

சென்னையில் கடந்த ஜூலை 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. செஸ் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று சென்னைக்கு வந்த அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று விமானத்தில் டெல்லி புறப்பட்டார். முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர்.

இந்நிலையில் டெல்லியில் இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குடியரசு துணைத்தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News