இந்தியா

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் டிஸ்மிஸ்

Published On 2023-03-02 05:26 GMT   |   Update On 2023-03-02 05:26 GMT
  • பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
  • மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த தகவல்கள் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படும்.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிக்கடி மாணவர்கள் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.

சமீபத்தில் பிரதமர் மோடி தொடர்பான பி.பி.சி. ஆவண படம் திரையிடுவது தொடர்பாகவும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் இருந்த பொருள்கள் அனைத்தும் அடித்து உடைத்து சூறையாடப்பட்டது. ஏராளமான மாணவர்களும் படுகாயம் அடைந்தனர்.

இதுதொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. மேலும் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையில் மாற்றம் கொண்டுவரவும், இதற்காக விதிகளில் மாற்றம் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா போன்ற போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வன்முறையில் ஈடுபட்டால் ரூ.30 ஆயிரம் அபராதம் மற்றும் அவர்களின் குற்றச்செயலுக்கு ஏற்ப அவர்களை டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்த தகவல்கள் அவர்களின் பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்படும்.

இந்த விதிமுறைகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பகுதி நேர மாணவர்களுக்கும் பொருந்தும். இந்த உத்தரவுகள் அனைத்தும் நாளை (3-ந் தேதி) முதல் அமலுக்கு வருகிறது, என பல்கலைக்கழக நிர்வாகிகள் செயற்குழு முடிவு செய்துள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகிகளின் இந்த முடிவுக்கு மாணவர் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News