இந்தியா
null

தேர்தல் கலவரத்தில் ஈடுபட்ட 550 பேர் கைது

Published On 2024-05-27 04:44 GMT   |   Update On 2024-05-27 04:47 GMT
  • கலவரத்தில் ஈடுபட்ட பலர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளுக்கு தப்பி சென்று விட்டனர்.
  • அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் கடந்த 13-ந் தேதி பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் மோதலால் கலவரம் ஏற்பட்டது.

பல்நாடு, திருப்பதி, அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் நடந்த கலவரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன.

கார்கள், இருசக்கர வாகனங்கள் தீவைக்கப்பட்டன. மேலும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நானி என்பவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை ராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் கலவரம் சம்பந்தமாக இதுவரை 800 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பல்நாடு மாவட்டத்தில் தேர்தல் கலவரம் சம்பந்தமாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடி பத்திரியில் நடந்த கலவரத்தில் 234 பேரை போலீசார் கைது செய்தனர். தெலுங்கு தேசம் வேட்பாளரை தாக்கியதாக 13 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதுவரை தேர்தல் கலவரம் சம்பந்தமாக மாநிலம் முழுவதும் 550 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர்களை கண்டறிந்து கைது செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

கலவரத்தில் ஈடுபட்ட பலர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளுக்கு தப்பி சென்று விட்டனர். அங்கு ஆந்திர மாநில போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் கலவரம் சம்பந்தமாக கண்காணிப்பு கேமரா மூலம் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலவரத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்ப முடியாது.

அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News